அரசு பஸ் முன்சக்கரம் கழன்று ஓடியதால் பீதி
துாத்துக்குடி:மதுரையில் இருந்து நெல்லைக்கு நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. மதுரையை சேர்ந்த ஜெயபாண்டி, 43, என்பவர் ஓட்டிச் சென்றார். பஸ்சில், 52 பயணியர் இருந்தனர். துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு -- கழுகுமலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், சோலார் மின் விளக்கு கம்பத்தில் மோதியது.பஸ் மோதிய வேகத்தில், சோலார் மின்விளக்கு கம்பம் விழுந்தது. மேலும், பஸ்சின் முன்புறம் இருந்த இரண்டு டயர்களும் தனியாக பிரிந்து சென்றது. முன்புறத்தில் இருந்த கண்ணாடி முற்றிலுமாக சேதமடைந்தது. பஸ்சில் இருந்த மூதாட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்ற பயணியர் எவ்வித பாதிப்பு இல்லாமல் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர்.விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கிரேன் உதவியுடன், விபத்தில் சிக்கிய அரசு பஸ்சை அப்புறப்படுத்தினர்.தமிழகத்தில் பல இடங்களில் அரசு பஸ்கள் பழுதாகி, ஆங்காங்கே நின்று வருகின்றன. இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாமல், அரசு பஸ் முன் சக்கரம் கழன்று ஓடியதை பார்த்த பயணியர் பீதியடைந்தனர்.