| ADDED : செப் 11, 2011 01:01 AM
செய்துங்கநல்லூர் : கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலில் பவித்ரோத்ஸவம் நடந்தது. ஒவ்வொரு நாளும் நடக்கும் ஆகம முறைமைகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனை சரிசெய்ய நடக்கும் பூஜைகள் தான் பவித்ரோத்ஸவம் என்பது ஆகும். இப்பவித்ரோத்ஸவம் கருங்குளம் வகுளகிரி மலையில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோயிலில் நடந்தது. கடந்த 7ம் தேதி துவங்கி 9ம் தேதி முடிவடைந்தது. இதனை முன்னிட்டு 7ம் தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சிகள் மற்றம் நிரந்தர உறுப்பினர்கள் குடும்ப சங்கல்பம் நடந்தது. மறுநாள் காலை திருமஞ்சனம், பவித்ரமாலைப் பிரதிஷ்டை ஹோமங்கள் நடந்தது. மாலை சங்கல்பத்துடன் ஸகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. 9ம் தேதி காலை சயனாதிவாசம் தொடர்ந்து பவித்ரமாலை சாற்றுதல் காலவேளை ஹோமம், பூர்ணாஹூதி, ஆராதனம், சாற்றுமுறை தீர்த்த கோஷ்டி ஆகியவை நடந்தது. மாலை 7 மணிக்கு உற்சவர் வடக்குக்கோயில் ஆஸ்தானம் சேருதல், திருமந்காப்பு, ஆராதனம், மந்திராசஷதை, ஆசீர்வாதம், பிரசாத விநியோகமானது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தார் வெங்கடாசாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பவித்ரோத்ஸவம் நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை கருங்குளம் ஸ்வாமி வெங்கடாசலபதி பக்த ஜன சபா செய்திருந்தது.