| ADDED : ஜூன் 15, 2024 12:10 AM
உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் நடந்த, இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொதுப்பிரிவு முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது. இதில், 747 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியானது.தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மருத்துவம், இன்ஜினியரிங், கலைக்கல்லுாரிகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டினர். இதையடுத்து, கலைக்கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் தமிழக அரசு வெளியிட்டது.மாணவர்களிடம் விண்ணப்பதிவு ஆன்லைனில் நடந்தது. ஏராளமான மாணவர்கள் கல்லுாரிகளில் சேர விண்ணப்பங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டன.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு பிரிவில் மொத்தமாக, 864 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, மே 28ம் தேதி துவங்கி இரண்டு நாட்களுக்கு நடந்தது. சிறப்பு பிரிவில் 29 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.பொதுப்பிரிவினருக்கான சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 10 முதல் 13 வரை நடந்தது. பொதுப்பிரிவு முதற்கட்ட கலந்தாய்வின் இறுதி நாளில், 118 மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினர் உட்பட மொத்தமாக, 747 பேர் சேர்ந்துள்ளனர்.இத்தகவலை, உடுமலை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.