| ADDED : ஜூலை 30, 2024 01:18 AM
உடுமலை:மின்னுரு புத்தகங்கள் தயாரிப்பதற்கான, சிறப்பு பணிமனைக்கூட்டம் உடுமலையில் நடந்தது.பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மின்னுரு புத்தகங்கள் தயாரிப்பதற்கான சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்கள், ஒலி வடிவில் பாடங்களை உள்வாங்கி கொள்வதற்கான முயற்சியாக, பாடப்புத்தகங்கள் மின்னுரு வடிவில் மாற்றுவதற்கான பணிகள் நடக்கிறது.இதன் ஒரு பகுதியாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், இப்பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கான பணிமனைக்கூட்டம் நடக்கிறது.திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், உடுமலை கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில், மின்னுரு புத்தகங்கள் தயாரிப்பு பணிமனைக்கூட்டம் நடந்தது.ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன் வழிகாட்டுதல் அடிப்படையில், இக்கூட்டம் நடந்தது.கடந்தாண்டு, நான்காம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் ஒலி வடிவில், மாணவர்கள் கேட்டு கற்றுக்கொள்ளும் வகையில் மாற்றப்பட்டது. அதன் வழியில், ஒன்றாம் வகுப்பு கணிதம் புத்தகம் மாற்றுவதற்கான பணிகள் தற்போது நடக்கிறது.திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பணியிடைப்பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பாபிஇந்திரா ஒருங்கிணைத்தார்.வட்டார கல்வி அலுவலர் சரவணக்குமார் பார்வையிட்டார். ஆசிரியர்கள் கண்ணபிரான், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணகுமார், பிரகாஷ் லீலா, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.