உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க., கவுன்சிலர்கள் திடீர் வெளிநடப்பு

தி.மு.க., கவுன்சிலர்கள் திடீர் வெளிநடப்பு

திருப்பூர் : ''தாராபுரம் நகராட்சி வார்டுகளில் எந்த வேலையும் நடக்காததால், வெளியில் தலைகாட்ட முடியவில்லை'' என்று ஆளும்கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தாராபுரம் நகராட்சி கூட்டம், தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நேற்று நடந்தது.கூட்டம் துவங்கியதும், ''வார்டு பகுதியில் எவ்வித வேலையும் நடக்கவில்லை. அதிகாரிகளிடம் தெரிவித்தால் அலட்சியமாக இருக்கின்றனர்'' என, பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளும்கட்சி கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மொத்தம் 16 தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் கூறியதாவது:ஆளும்கட்சி கவுன்சிலராக உள்ள எங்களுக்கு அதிகாரிகள் முதல் டிரைவர் வரை யாரும் மரியாதை அளிப்பதில்லை. ஒருமையில் பேசுகின்றனர். வார்டு பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து நகராட்சி தலைவர், அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுப்பதில்லை. கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக வார்டுக்குள் குப்பை எடுப்பதில் ஆரம்பித்து எந்த வேலையும் முறையாக நடக்கவில்லை. எங்களால் வார்டுக்குள் தலையை காட்டவே முடிவதில்லை. இதுதொடர்பாக துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நகராட்சித் தலைவர் பாப்பு கண்ணனிடம் இதுதொடர்பாக கேட்க தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.---தாராபுரம் நகராட்சிக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், வெளிநடப்பு செய்த தி.மு.க., கவுன்சிலர்கள்.

கோஷ்டிப்பூசல் உச்சகட்டம்

தாராபுரம் நகராட்சி 30 வார்டுகளைக் கொண்டது. தி.மு.க., - 25 வார்டு, அ.தி.மு.க., - 3, காங் - பா.ஜ., தலா, ஒரு வார்டை தங்கள் வசம் வைத்துள்ளது. பெரும்பான்மையான கவுன்சிலர்களை கொண்ட தி.மு.க.,வினர் மத்தியில் கோஷ்டிப்பூசல் நிலவி வருகிறது. இதன் காரணமாக எந்தவித வேலைகளும் வார்டுக்குள் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி