விற்பனை கூடத்திற்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு ஒரு கிலோ ரூ. 147.99க்கு விற்பனை
உடுமலை, ; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொப்பரை வரத்து அதிகரித்த நிலையில், விலையும் உயர்ந்து, இ-நாம் திட்டத்தில் விற்பனையானது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்றுமுன்தினம் நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, சின்னாம்பாளையம், எலையமுத்துார், தென்குமாரபாளையம், விளாமரத்துப்பட்டி, தளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, 22 விவசாயிகள், 257 மூட்டை அளவுள்ள, 12 ஆயிரத்து, 850 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 10 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.முதல் தரம், ரூ.138 முதல், ரூ. 147.99 வரையும், இரண்டாம் தரம், ரூ. 117.99 முதல், 132.99 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.கொப்பரை வரத்து அதிகரிப்பு மற்றும் தரம் காரணமாக, ஏராளமான நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்கின்றன.இங்கு, கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்திற்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இதனால், வாரந்தோறும் கொப்பரை வரத்து அதிகரித்து வருகிறது. இ-நாம் திட்டத்தின் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.