டிஜிட்டல் யுக இரைச்சலில், நாதஸ்வர ஓசை சற்றே குறைந்திருந்தாலும், கோவில்கள், சுப நிகழ்ச்சிகள் வாயிலாக அக்கலை இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது.திருப்பூர், முத்தணம்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், ஆடி அமாவாசை நாளில், நாதஸ்வரம் குறித்து பலரும் அறிந்திராத தகவல்களை எடுத்துரைத்தார், ஆசிரியை கீதா; அவரது உரை:சரஸ்வதி கையில் வீணை; சிவன் கையில் உடுக்கை இருக்கிறது. எந்த இறைவன் கையிலும் நாதஸ்வரம் இருக்காது; ஏனெனில், நாதஸ்வரமே இறையாக பார்க்கப்படுகிறது. முன்புறம் வட்ட வடிவில் இருப்பது அனசு; அதை சூரியவட்டம் என்கிறோம்; அது, சூரியபகவானின் அம்சம். குழாய் போன்ற சாமரத்தின் உள்ளே பிரம்மா வசிக்கிறார். சப்த கன்னியர் அம்சமாக, காற்று இசையாக மாறும் ஏழு துளைகள் இருக்கின்றன; மொத்தம் உள்ள, 12 துளைகளில், ஐந்து துளைகள் மெழுகால் அடைக்கப்பட்டிருக்கும்; புலனடக்கம் என்ற தத்துவம் அங்கே இருக்கிறது.நாதஸ்வரத்தின் மேற்புரம், தாமிரத்தில் செய்த கெண்டை, சக்தியின் அம்சமாக இருக்கிறது. நாதஸ்வரத்தில் பொருத்தி வாசிக்கும் சிறிய ஊசி போன்றது சிவாளி என்பது சிவபெருமான்; சிவன் ஒலி வடிவமாக வியாபித்திருக்கிறார். அனைத்து இறைசக்தியும் நாதஸ்வரத்தில் இருப்பதால், இறைவன் கையில், இது இருப்பதில்லை. 'ஜீவன் என்பது உயிர், வளி என்பது காற்று; உயிர் கலந்த காற்றை இசையாக மாற்றுவதையே சிவாலி என்கிறோம். நாபிக்கமலத்தில் இருந்து வரும் நாதஸ்வர ஓசையே இசையாக மெய்சிலிர்க்க வைக்கிறது. பல்வேறு இசைக்கருவிகள் இருந்தாலும், நாதஸ்வரமும், தவிலும் தான், மங்களவாத்தியம் எனப்படுகின்றன. இவ்வாறு, கீதா பேசினார். அவர் பேசி முடித்ததும், மயிலாடுதுறை மாவட்டம், திருப்பாம்புரம் சகோதரர்கள் குஞ்சிதபாதம், சேஷகோபாலன் ஆகியோர் நாதஸ்வரம் இசைக்க, மன்னார்குடி வாசுதேவன், ராமேஸ்வரம் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தவிலிசைக்க, அந்த மாலைப்பொழுது இன்னிசை மழையால் நனைந்தது.
மங்கள நிகழ்ச்சியில் நாதஸ்வரம் இசைக்க வேண்டும்
''எந்தவொரு மங்கள நிகழ்ச்சியாக இருந்தாலும், நாதஸ்வர இசை அவசியம் இருக்க வேண்டும். செலவை குறைக்கலாம் என்று யோசிக்காமல், மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கு மங்களம் கூட்ட, நாதஸ்வர இசை அங்கு தவழ வேண்டும்'' என்றார், ஆசிரியை கீதா.