| ADDED : ஆக 09, 2024 02:25 AM
திருப்பூர்;'கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் காக்க 'இன்சினரேட்டர்' கருவி பொருத்த வேண்டும்' என்ற யோசனை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றியங்களில், 264 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. ஊராட்சிகளில், மக்கள் தொகைக்கேற்ப துாய்மைப் பணியாளர்கள் இல்லை. ஊராட்சிகளில், குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. குப்பைகளை அகற்ற, திடக்கழிவு மேலாண்மை செய்வதற்கான கட்டமைப்பு இல்லை. பல இடங்களில் குப்பைகள் தீயிட்டும் எரியூட்டப்படுகின்றன; இதனால், காற்று மாசு ஏற்படுகிறது.தொரவலுார் ஊராட்சி தலைவர் தேவகிசம்பத்குமார், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:எங்கள் ஊராட்சியை துாய்மையான ஊராட்சியாக மாற்ற பல முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஊராட்சியில் துாய்மைப்பணி மேற்கொள்ள போதிய துாய்மைப் பணியாளர்கள் இல்லை. இதனால், புதிதாக உருவான குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடம் இருந்து குப்பையை சேகரிக்க முடியாத நிலையுள்ளது. குப்பைத் தொட்டியில்லாத இடங்களில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.இதே நிலை தான் பெரும்பாலான ஊராட்சிகளில் நிலவுகிறது. இதுகுறித்து மாவட்ட அளவில் விரிவான ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்; துாய்மைப் பணியாளர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 'இன்சினரேட்டர்' பயன்படுத்தி, குப்பைகளை எரியூட்டி, அதன் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். இத்தொழில்நுட்பத்தை தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.---தேவகி