| ADDED : ஜூன் 12, 2024 10:50 PM
அனுப்பர்பாளையம் : திருப்பூர், 25வது வார்டு சிறுபூலுவபட்டி ரிங் ரோடு, வடக்கு ஆர்.டி.ஓ., ஆபீஸ் எதிரில், வரிசையாக கல் நட்டி கான்கிரீட் கலவை போட்டு பூசி உள்ளனர். இந்த வேலையை யார் செய்தது என தெரியவில்லை. இவ்வாறு கல் நட்டப்பட்டுள்ளதால், வாகனத்தில் செல்வோர் கல்லில் மோதி விபத்தை சந்தித்து வருகின்றனர். அதிலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்.அப்பகுதியினர் கூறியதாவது:இப்பகுதியில் அதிக அளவில், வீடுகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் உள்ளன. ரிங் ரோடு என்பதால், வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். ரோட்டையொட்டி யாரோ கற்களை நட்டி, கான்கிரீட் கலவையும் பூசி விட்டனர்.இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் விட்டு செல்லும்போது, இடதுபுறம் கல்லில் மோதி விடுகின்றனர். அதிலும், இரவு நேரத்தில் பலரும் கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு வரும் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க இதுபோல் செய்துள்ளனரா என்பதும் தெரியவில்லை.நெடுஞ்சாலை துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. உயிர் பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.