| ADDED : ஜூன் 27, 2024 11:24 PM
திருப்பூர் : 'குறுமையப் போட்டி களுக்கு மைதானம், வீரர், வீராங்கனைகளை உடற்கல்வி ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும்,' என, உடற்கல்வி ஆய்வாளர் அறிவுறுத்தியுள்ளார்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி மைதானங்களைத் துாய்மைப்படுத்தி, ஒவ்வொரு போட்டிக்கான ஆடுகளத்தையும் போட்டி நடத்தும் வகையில் தயார்ப்படுத்திட வேண்டும். விரைவில் போட்டிகள் துவங்கவுள்ளதால், காலை, மாலை உடற்பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும்.உடற்கல்வி பாடவேளையை வேறு பாடவேளையாக மாற்றாமல், மாணவர்களின் திறமையைச் சோதிக்கும் நேரமாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் அல்லது மாலை சிறப்பு உடற்பயிற்சியை தொடர வேண்டும்.புதிதாக பள்ளியில் இணைந்த ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியரில் விளையாட்டில் ஆர்வமாக உள்ளவர்களை இப்போதிருந்தே போட்டிகளுக்குத் தயார் படுத்த வேண்டும். தடகளம், புதிய மற்றும் பழைய விளையாட்டுக்கு பள்ளிக்கு ஒரு அணி கட்டாயம். எனவே, விளையாட்டு போட்டிகளுக்கு பள்ளி அளவிலான அணிகளை உருவாக்க வேண்டும்.ஏற்கனவே போட்டிகளில் பங்கேற்றவர், திறமை காட்டிய வீரர், வீராங்கனை விபரத்தை பதிவேடாக பராமரிக்க வேண்டும். குறு மையம், உலக திறனாய்வு தேர்வுக்கு தயார்படுத்திட வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.