உடுமலை;மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு தொழில் நுட்ப உதவிகள் மற்றும் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.மக்காச்சோளம், கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி, உணவுப்பொருட்கள் உற்பத்திக்கு பிரதானமாக உள்ளது. தற்போது, எத்தனால் உற்பத்தி செய்யவும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுவதால், தேவை அதிகரித்து, விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், மானாவாரி மற்றும் பி.ஏ.பி., பாசனம், அமராவதி பாசன நிலங்களில் மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், ஆண்டுக்கு, 21,020 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் தொழில்நுட்பங்களை பரப்ப, அரசு ஊக்குவிக்கிறது. 2024 - 2025ம் ஆண்டுக்கு, 16.81 லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், தொழில்நுட்பங்கள் அடங்கிய மக்காச்சோள செயல் விளக்கத்திடல் அமைக்க, ஹெக்டேருக்கு, 6,000 ரூபாய் மதிப்பில் மானியம் வழங்கப்படுகிறது.மக்காச்சோளத்தில் பயறு வகை பயிர்கள், ஊடுபயிர் செயல் விளக்கத்திடல் அமைக்க, எக்டருக்கு, 6,000 ரூபாய் மானியம்; வீரிய ஒட்டு ரக விதைக்கு, கிலோவுக்கு, 100 ரூபாய் அல்லது, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.உயிர் உர வினியோகத்திற்கு, ஹெக்டேருக்கு, 300 ரூபாய் அல்லது, 50 சதவீதம்; பயறு நுண்ணுாட்டச்சத்து மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து வினியோகத்திற்கு, எக்டேருக்கு, 500 ரூபாய் அல்லது, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.தானிய உற்பத்தி குறித்த மேலும் விபரங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் மானிய உதவி பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை, வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.