உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில நல்லாசிரியர் விருது சேவைகளை அடையாளப்படுத்துகிறது ஆசிரியர்கள் பெருமிதம்

மாநில நல்லாசிரியர் விருது சேவைகளை அடையாளப்படுத்துகிறது ஆசிரியர்கள் பெருமிதம்

உடுமலை:'மாநில நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது இந்த சேவைகளை அடையாளப்படுத்தும் வகையில் பெருமையாக உள்ளது,' உடுமலையில், மாநில நல்லாசிரியர்கள் விருது பெற்றவர்கள் தெரிவித்தனர்.டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி மாநில மற்றும் தேசிய அளவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. உடுமலையில், மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அடிப்படை கல்விக்கு முக்கியத்துவம்

சிவராஜ், பூளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர். குடிமங்கலம் வட்டாரம்.:ஆசிரியர் பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு இருக்க வேண்டுமென, துவக்கத்தில் எடுத்த உறுதியை இப்போது வரை பின்பற்றுகிறேன். பள்ளியை விட்டு செல்ல எப்போதும் மனமில்லாமல், நான்கு ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பணியில் உள்ளேன்.மாநிலம், மாவட்டம், வட்டார அளவில் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் சிறந்த கருத்தாளராக பணியாற்றி உள்ளேன்.பள்ளிக்கு தேவையான உதவிகளை தன்னார்வலர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி, பள்ளியின் கட்டமைப்பும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் அவர்களுக்கு பரிசளித்து ஊக்குவித்து வருகிறேன்.பள்ளி வளாகத்தில் மட்டுமின்றி, மாணவர்கள் இருக்கும் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதற்கான செயல்நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.மாநில நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது இந்த சேவைகளை அடையாளப்படுத்தும் வகையில் பெருமையாக உள்ளது.

எளிய முறை கல்விக்கு கிடைத்த பரிசு

செல்வராஜ், எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.:கற்றலை எளிமையாக்கி பொது அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும், பாடங்களை மாணவர்களுக்கு ஏற்ப பாடல்களாக மாற்றித்தான் வகுப்புகள் நடக்கிறது.கொரோனா காலத்திலும் இடைவிடாது மாணவர்களின் நலனுக்காக அவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தினோம். இந்த விருது கிடைப்பதற்கு மாணவர்களின் பெற்றோரும் முக்கிய காரணமாக உள்ளனர்.விருது பெற்றதில் மிகிழ்ச்சியாக இருப்பதோடு, இன்னும் வேகமாக கற்பித்தலை தொடர வேண்டுமென புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.என் பெற்றோரின் கனவு நிறைவேறியுள்ளது. ஓய்வையும், தொய்வையும் தவிர்த்து சுறுசுறுப்பாக இயங்க செய்து, மீண்டும் என்னை புதுப்பித்துக் கொள்ள துாண்டுதலாக உள்ளது.விருதின் வாயிலாக கிடைக்கும் தொகையில், பள்ளிக்கும் மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் பொருள் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன்.

நல்லாசிரியர் விருது பள்ளிக்கான வெற்றி

பூரணி, தலைமை ஆசிரியர், எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி உடுமலை.இருபத்தி எட்டு ஆண்டுகள் கணிதவியல் ஆசிரியராகவும், பின், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியதன் அடையாளம்தான் இந்த விருது. எப்போதும், நுாறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கை நோக்கி பள்ளியை பயணிக்க செய்தோம்.ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை புதிய கணித பாடப்புத்தகம் உருவாக்க அமைக்கப்படும் பாடத்திட்டக்குழுவினர் பணி செய்கிறேன். புதிய பாடத்திட்டம், புத்தக உருவாக்குவதிலும் பங்களிப்பு உள்ளது.பள்ளியில் மாணவர்களிடம் தமிழ் மீதான பற்றை மேம்படுத்த பாரதியார் பிறந்தநாளையொட்டி சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு அவர்களை ஊக்குவிக்கிறோம். நல்லாசிரியர் விருது கிடைப்பதிருப்பது பள்ளிக்கான வெற்றியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை