திருப்பூர்;வடிகால் பணிக்காக வெட்ட வேண்டிய மாமரத்தை, வேருடன் பெயர்த்து எடுத்து, மறுநடவு செய்த கணக்கம்பாளையம் ஊராட்சியை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ரத்னா நகர்; அப்பகுதியில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தார்ரோடும், மூன்று லட்சம் ரூபாயில் வடிகால் பணியும் நடக்க உள்ளது. ரோடு அமைக்க, நிலத்தை அளவீடு செய்த போது, தனியார் ஒருவர் வளர்த்த மாமரம் இடையூறாக இருந்தது.எட்டு ஆண்டுகளாக வளர்த்து, காய்பிடிக்கும் பருவம் என்பதால், மரத்தை வெட்ட வேண்டாமென, ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அருகே உள்ள 'ரிசர்வ்' சைட்டில், குழி தோண்டி, மரத்தை வேருடன் பெயர்த்து எடுத்து மறுநடவு செய்துள்ளது. வேலை உறுதி திட்ட பணியாளர் மூலம், மரம் தழைக்கும் வரை தண்ணீர்விட்டு பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் மரம் பாதுகாப்பு நடவடிக்கையை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.----கணக்கம்பாளையத்தில், ரோடு பணிக்கு இடையூறாக இருந்த மாமரம், வேறு இடத்தில் மறுநடவு செய்யப்பட்டது.
ஒரே மரம் என்றாலும், அதை வெட்டி வீணடிக்க கூடாது; பாதுகாத்து வளர்க்க வேண்டும்' என்று, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே, எட்டு வயதுள்ள மரத்தை, வேறு இடத்தில் மறுநடவு செய்துள்ளோம். ஊராட்சி மக்களுக்கு, மரம் வளர்ப்புக்கான அடையாள சின்னமாக இந்தமரம் வளர்க்கப்படும்.
- சண்முகசுந்தரம், ஊராட்சி தலைவர், கணக்கம்பாளையம்.