உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாய்ப்புகள் வருமா... வர்த்தகம் உயருமா? வங்கதேச விவகாரம்: நம்மை நோக்கி முதலீடுகள் நகரலாம்

வாய்ப்புகள் வருமா... வர்த்தகம் உயருமா? வங்கதேச விவகாரம்: நம்மை நோக்கி முதலீடுகள் நகரலாம்

திருப்பூர்;''வளர்ந்த நாடுகள், வங்கதேசத்தில் நீண்டகால முதலீடு செய்வதை தள்ளிப்போடவும், அதற்கு பதிலாக இந்தியாவில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆர்டர்கள் உடனடியாக நம்மை நோக்கி நகருமா என்று சொல்ல முடியாது'' என்கின்றனர் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்.இந்தியாவுடன் நல்ல வர்த்தக உறவு நீடித்ததால், வங்கதேசம் அதிகளவு பயனடைந்தது. இருப்பினும், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், இந்தியாவை தாண்டி வளர்ச்சி பெற்றுள்ளது. உலக சந்தைகளை கையில் வைத்திருக்கும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் வங்கதேசம் இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அதிக அளவு ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கின்றன. முன்னேறிய வங்கதேசம்ஆயத்த ஆடை ஏற்றுமதியில் வங்கதேசம் இரண்டாமிடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் இருக்கின்றன. காரணம், சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் அதிகம் முன்னேறிவிட்டன. இந்தியா பருத்தி நுால் பின்னலாடை உற்பத்தியை மட்டுமே நம்பியிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுமே, பின்னலாடை நிறுவனங்கள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் கால்பதித்து வருகின்றன.மாதம் ரூ.30,000 கோடிவங்கதேசம், மாதம் ஒன்றுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் செய்கிறது. நமது நாட்டில் இருந்து, 11 ஆயிரம் கோடி முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடை மட்டுமே ஏற்றுமதியாகிறது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பத்தால், அந்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் பெரிய பாதிப்பு இருக்காது; படிப்படியாக ஆர்டர்கள் இந்தியாவுக்கு மாறவும் வாய்ப்புள்ளதாக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். உற்பத்தி செலவு குறைவுஅந்நாட்டின் ஆயத்த ஆடை உற்பத்திச்செலவு, நம் நாட்டு உற்பத்திச்செலவை காட்டிலும், 20 சதவீதம் குறைவு. இதன் காரணமாக, ஆர்டர்கள் உடனடியாக இந்தியாவை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்க முடியாது. வளர்ந்த நாடுகள், வங்கதேசத்தில் நீண்டகால முதலீடு செய்வதை தள்ளிப்போடவும், அதற்கு பதிலாக இந்தியாவில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது.வங்கதேச தலைநகர் டாக்காவில் மட்டுமே போராட்டம் இருந்தது; மற்ற இடங்கள் அமைதியாக இருப்பதாக கூறுகின்றனர். இதனால், வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என்றே ஆணித்தரமாக கூறுகின்றனர். திருப்பூருக்கு ஒரு திருப்பம் வரும்வங்கதேசம் - ஐரோப்பிய நாடுகள் இடையேயான, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், 2025ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு, இந்தியாவுடன் அந்த வாய்ப்பு தேடிவரும். உலக நாடுகள் மத்தியில், பசுமை சார் உற்பத்தி என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. திருப்பூர், பசுமை சார் உற்பத்தியில் முன்னோடியாக இருப்பதால், திருப்பூருக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.------மாதம்தோறும் ஆடை ஏற்றுமதிவங்கதேசம் - ரூ.30 ஆயிரம் கோடிஇந்தியா - ரூ.12 ஆயிரம் கோடி-------

தொழில் வர்த்தக முதலீடு திசைமாறும்

இளங்கோவன் கூறியதாவது:புதிய இடைக்கால அரசு அமைந்ததும், வங்கதேசத்தில் இயல்புநிலை திரும்பிவிட்டது. இதன் காரணமாக, ஏற்றுமதி ஆர்டர் மீதான உற்பத்தி மீண்டும் வேகமெடுக்கும். வரியில்லா வர்த்தக ஒப்பந்த அடிப்படையில், இந்தியாவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்வதில் சிறிய தொய்வு ஏற்படலாம். அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி தொழில்; இடைக்கால அரசு, முதலில் தொழில்நிலையை சீராக்கிவிடும்; வங்கதேசத்துக்கான குறுகியகால ஏற்றுமதி ஆர்டர்கள் உடனடியாக இந்தியாவுக்கு கைமாறும் என்று கூறமுடியாது. மாறாக, நீண்டகால ஆர்டர், புதிய தொழில் முதலிடுகள் இந்தியாவுக்கு மாற வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையின் முயற்சித்தால், புதிய செயற்கை நுாலிழை ஆடைகளுக்கான ஆர்டர்களை ஈர்க்க முடியும். - இளங்கோவன், தலைவர், அனைத்து ஜவுளி ஏற்றுமதி வர்த்தக முகமைகள் கூட்டமைப்பு (அபாட்). ----தொழில்நுட்ப மறுமலர்ச்சி அவசியம்வங்கதேசத்தின் அசாதாரண சூழல், நமது நாட்டு வர்த்தகத்துக்கு சாதகமாக அமையுமா என, பலரும் ஆலோசித்து வருகின்றனர். பல சிக்கல்களை கடந்து வந்த வங்கதேசம், இப்பிரச்னையில் இருந்தும், விரைவில் இயல்புநிலைக்கு திரும்பிவிடும். ஐரோப்பிய நிறுவனங்கள், மீண்டும் திருப்பூர் வந்து, பசுமை சார் உற்பத்தி படிநிலைகளை நேரில் பார்த்து, வர்த்தகத்துக்கு அடித்தளமிட்டு வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே, ஐரோப்பிய வர்த்தகம் திருப்பூரை நோக்கி வரத்துவங்கிவிட்டது. சீனா மற்றும் வங்கதேசத்துக்கான ஆர்டர்கள், குறிப்பிட்ட அளவு இந்தியாவுக்கு மாறும்; திருப்பூர் அந்த வாய்ப்பை கைப்பற்றும். பலரும் எதிர்பார்ப்பது போல், உடனடியாக திருப்பூரில் உற்பத்தியை உயர்த்திவிட முடியாது. நமது உற்பத்தி திறன் என்பது, 40 சதவீதம்; வங்கதேசம், 80 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. திருப்பூரில், ஒரு மெஷினுக்கு, இரண்டு ஆட்கள் என்ற வகையில் உற்பத்தி நடக்கிறது. வங்கதேசத்தில், 10 மெஷின்களுக்கு 13 பேர் என்ற வகையில் பணியாற்றுகின்றனர். மனிதவளம், எரிசக்தி, உற்பத்தி செலவு என, பல வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். நமது தொழில்துறையும் அதேபோல் முன்னேற்றம் காண வேண்டும்; நம் நாட்டிலும், தொழில்நுட்ப ரீதியான மறுமலர்ச்சி உருவாக வேண்டும். படிப்படியாக, நாமும் உற்பத்தி திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். - குமார் துரைசாமி, இணைச்செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி