| ADDED : ஜன 26, 2024 01:30 AM
பல்லடம்:பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, பல்லடத்தில், அரசுப் பள்ளி மாணவியருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் சாந்தி தலைமை வகித்தார். பல்லடம் ஜே.எம்., கோர்ட் மாஜிஸ்திரேட் சித்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மரியாலயா பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மறுவாழ்வு இல்ல இயக்குனர் லுார்து சகாயம், 'பெண் குழந்தைகள் தங்களது இலக்குகளை பெரிதாக வைத்துக் கொண்டு அதனை நோக்கி தன்னம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும். பெண்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள். எனவே, பெண் குழந்தைகள் அனைவரும் எதிர்காலத்தில் யாருடைய உதவியும் இன்றி வாழ்க்கையில் சுய முடிவுகளை எடுக்கும் நபராக இருக்க வேண்டும்,' என்று பேசினார்.முன்னதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா தலைமையில் கையெழுத்து பிரசாரம் நடந்தது. 'அனைவரும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம்,' என உறுதி மொழி ஏற்று கையெழுத்திட்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ், கார்த்திக் பாபு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.