ராபி பருவ சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு; வேளாண் துறை அழைப்பு
உடுமலை: ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு, பயிர்க்காப்பீடு செய்து கொள்ளுமாறு, குடிமங்கலம் வட்டார வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிமங்கலம் வட்டாரத்தில் நடப்பு ராபி பருவத்தில், மக்காச்சோளம், சோளம் மற்றும் கொண்டக்கடலை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பயிர்கள் இயற்கை இடர்ப்பாடுகளால் பாதித்தால், உரிய இழப்பீடு பெறும் வகையில், பயிர்க்காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கார்த்திகா கூறியதாவது: பயிர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கிடவும், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்க செய்யும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளம், சோளம் மற்றும் கொண்டக்கடலை ஆகிய பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். பயிர்க்கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக, பதிவு செய்யலாம். கடன் பெறாத விவசாயிகள், பொது இ - சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், தனிநபர் ஆதார் அட்டை, சிட்டா, நடப்பாண்டு பசலி அடங்கல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்யலாம். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திட, பயிர் காப்பீடு கட்டணமாக மக்காச்சோளப்பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.545, சோளம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.55 மற்றும் கொண்டக்கடலை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.254- ஆகும். மக்காச்சோளம் மற்றும் கொண்டக்கடலை பயிர்களுக்கு, வரும், 30ம் தேதிக்குள்ளும், சோளம் பயிருக்கு, டிச., 16ம் தேதிக்குள்ளும் பயிர்க்காப்பீடு செய்ய, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் உடனடியாக பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்தார்.