| ADDED : மார் 13, 2024 01:06 AM
திருப்பூர்:திருப்பூர், பலவஞ்சிபாளையத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர், தன் மகன் அசோக்குமாருக்கு, இலவச வீட்டுமனை பட்டாவை தானமாக வழங்க முடிவு செய்தார்.இது தொடர்பாக, திருப்பூர் தெற்கு ஆர்.ஐ., அலுவலகத்தை அசோக்குமார் தொடர்பு கொண்டார். இலவச வீட்டுமனை பட்டாவை கிரயம் செய்ய தடையின்மை சான்று வழங்க, 10,000 ரூபாய் வேண்டுமென, ஆர்.ஐ., நாகராஜன் கேட்டார்.பேரம் பேசப்பட்டு, 8,000 ரூபாய்க்கு வழங்க ஒப்புக் கொண்டார். இதுதொடர்பாக, அசோக்குமார் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அசோக்குமாரிடம் வழங்கினர்.நேற்று மதியம், ஆர்.ஐ., நாகராஜனை சந்தித்து, 8,000 ரூபாயை கொடுத்த போது, மறைந்து இருந்த திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் அவரை பிடித்தனர்.லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ., நாகராஜன் மற்றும் உடந்தையாக இருந்த உதவியாளர் சுரேஷை போலீசார் கைது செய்தனர்.