திருப்பூர்:கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை, திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும்; 15 ஏக்கர் பரப்பில், கண்காட்சி மற்றும் வர்த்தகமையம் அமைக்க வேண்டுமென, பின்னலாடை தொழில் துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.'டாலர் சிட்டி' என்று அறியப்படும் திருப்பூரின் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென, தொழில் துறையினர் எதிர்பார்த்துள்ளனர். அது குறித்து விரிவாக பார்ப்போம்... மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில் திட் டம், கோவை மாவட்டத்தில், இருபாதைகளாக செயல்படுத்தப்படுகிறது. அவிநாசி ரோட்டில் கணியூர் வரையிலும், திருச்சி ரோட்டில் காரணம்பேட்டை வரையிலும் அமையும் மெட்ரோ ரயில் திட்டத்தை, சாமளாபுரம் வரை கொண்டு வந்து இணைத்து, நொய்யல் கரையோரமாக திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். 'கூட்ஸ் ெஷட்'
நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, 'கூட்ஸ் ெஷட்' வஞ்சிபாளையம் ஸ்டேஷனுக்கு மாற்றும் பணி நடந்து வரு கிறது; பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அவிநாசி வழியாக கோபி, சத்தியமங்கலம் பகுதிக்கும், பல்லடம் வழியாக பெள்ளாச்சி, உடுமலை செல்லும் வாகனங்கள், திருப்பூர் நகருக்குள் வராமல் சென்றுவரும், நகரின் நெரிசல் வெகுவாக குறையும். ரயில்வே மேம்பாலம்
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்க, அவிநாசி ரோடு - பி.என். ரோடு இணையும் பகுதியில் இருந்து, நடராஜா தியேட்டர் வரையில், புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். இதனால், குமரன் ரோட்டில் வாகன நெரிசல் குறையும். 'டிரான்ஸ்போர்ட் சிட்டி'
சரக்குகளை கையாள வசதியாகவும், கனரக போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், நகரின் வெளியே, 'டிரான்ஸ்போர்ட் சிட்டி' அமைக்க வேண்டும். திருப்பூரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், விசாலமான டிரான்ஸ்போர்ட் சிட்டி அமைக்க, மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்த்தக மையம்
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தக கண்காட்சி வளாகம், 15 ஏக்கர் பரப்பில் அமைய வேண்டும். கோவையில் கொடீசியா போல், திருப்பூரில் விரிவான கண்காட்சி மற்றும் வர்த்தக மையம் அமைக்கப்பட வேண்டும். ஆண்டு முழுவதும், தொழில் கண் காட்சி, கருத்தரங்கு, பயிலரங்கு நடத்த வசதியான அரங்குகளுடன், வர்த்தக மையம் அமைக்க வேண்டும். அடுக்குமாடி வீடு
வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட மக்கள், பாதுகாப்பாக தங்கி பணியாற்ற வசதியாக, வீட்டுவசதி செய்யப்பட வேண்டும். அடுக்குமாடி வீடுகள் கட்டி, அவர்கள் பாதுகாப்பாக தங்கி, பணிபுரிய வழிவகை செய்ய வேண்டும். குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கினால், தொழிலாளர் நிரந்தரமாக தங்கி பணியாற்ற வசதியாக இருக்கும். இ.எஸ்.ஐ., சேவை
திருப்பூர் பனியன் தொழிலாளர் வாயிலாக, இ.எஸ்.ஐ., திட்டத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி கிடைக்கிறது. ஆனால், தொழிலாளருக்கு தேவையான இ.எஸ்.ஐ., சேவை முழுமையாக கிடைப்பதில்லை.நடந்து வரும், இ.எஸ்.ஐ., மருத்துவமனை பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து வகையான இ.எஸ்.ஐ., சேவையும், திருப்பூரிலேயே தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பொறியியல் கல்லுாரி
திருப்பூர் மாவட்டத்தில், பொறியியல் கல்லுாரி இல்லாததால், நகரின் அருகே, அரசு பொறியியல் கல்லுாரி அமைக்க வேண்டும். குறிப்பாக, திருப்பூர் பனியன் தொழில்துறை பயன்பெறும் வகையில், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட தொழிற்கல்வியை அளிக்க வேண்டும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பனியன் தொழில், மென்மேலும் வளர்ச்சி பெற, சரியான தொழிற்கல்வியும் அவசியம்.அத்தியாவசியமானது...இதுகுறித்து 'நிட்மா' தலைவர் அகில் ரத்தினசாமி கூறுகையில், ''திருப்பூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டித்தால் மட்டுமே, அத்திட்டம் முழுமையான வெற்றி பெற முடியும்; அதிக மக்கள் பயன்படுத்தினால் மட்டுமே லாபம் அடைய முடியும். கூட்ஸ் ெஷட் பணி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை பணிகளை, அரசு விரைந்து முடிக்க வேண்டும். திருப்பூரில், 15 ஏக்கர் பரப்பில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும். இத்தகைய அத்தியாவசியமான கோரிக்கைகள், மத்திய, மாநில அரசுகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,'' என்றார்.