மூலிகை தாவரங்கள் மூலம் பெருகும் தொழில் வாய்ப்புகள்
வி லைமதிப்பற்றவை மூலிகைகள்; ஆனால், இவை குறித்த அறியாமையால், மூலிகைகள் என்று உணராமலேயே பலரும் அதைப் புறக்கணித்திருக்கிறோம். தற்போது, விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. மூலிகைகள் உடல் நலனுக்கு அவசியம் என்பதை இளம் தலைமுறையினர் உணரத் துவங்கியிருக்கின்றனர். இது தொழில் வாய்ப்பாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரித்தால் வரவேற்பு திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர் அரசுக்கல்லுாரியில் 'மூலிகை அறிவியல் மூலம் இளைஞர் மற்றும் பெண்கள் மேம்பாடு என்ற கருத்தரங்கம் நடந்தது. இதில் பங்கேற்றோர் தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை. கீதா, முன்னாள் முதல்வர், நிலக்கோட்டை மகளிர் அரசுக்கல்லுாரி: மனிதர்கள் இல்லாமல் இயங்கும் உலகம், தாவரங்கள் இல்லாமல் இயங்காது. ஒவ்வொரு தாவரத்திலும் பயன் உள்ளதால் தாவரம் சார்ந்த பல தொழில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. புரதம் மிகுந்த ஸ்பைருலினா, ஊட்டச்சத்து மிகுந்த காளான், பேக்கரியில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட், கால்நடை தீவனமான அசோலா, கடற்பாசிகள் போன்றவற்றிற்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவற்றை குறைந்த செலவில் வீட்டிலும் வளர்க்கலாம். இன்று அழகு செடிகள், பூச்செடிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நர்சரி அமைத்து விதைகள், செடிகள், விற்கலாம். உணவு கூட கெடும்; ஆனால் தாவரங்கள் கெடாது, ஒருநாள் இல்லை என்றாலும் மற்றொரு நாள் விற்கும்; நீண்ட நாள் தாராளமாக வளர்க்கலாம். நெல்லி, செம்பருத்தி, முருங்கை போன்ற இயற்கை பொருட்களை தேன்நெல்லி, பொடி, தொக்கு செய்து மதிப்புக்கூட்டு பொருட்கள் ஆக்குதல் என பல தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. மலை மூலிகைகளுக்குஎன்றும் மவுசு குருசாமி, முன்னாள் தாவரவியல் துறை தலைவர், எல்.ஆர்.ஜி. கல்லுாரி: நம் வீட்டில் மருந்தாக பயன்படும் துளசி, முருங்கை, வேம்பு, அஸ்வகந்தா போன்றவற்றை அனைவருக்கும் பயன்படும்படி பெரிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும். மூலிகை தாவரங்களுக்கு, குறிப்பாக மலைகளில் இருக்கும் மூலிகைக்கு மதிப்பு அதிகம். எவ்வித பூச்சி மருந்து, செயற்கை உரங்கள் இல்லாமல் வளர்வதால் அதன் மருத்துவ குணம் அதிகம். மருத்துவம், ஊட்டச்சத்து, அழகு சாதனம், வாசனை சிகிச்சை, பாரம்பரிய முறை போன்ற பல கோணங்களில் மூலிகை தாவரங்கள் வைத்து தொழில் துவங்கலாம். இதற்கு சந்தையில் மதிப்பு அதிகம்.