நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை; அவிநாசி வணிகர் சங்கத்தினர் ஆவேசம்
அவிநாசி; அவிநாசி அனைத்து வணிகர் சங்கம் சார்பில், நகராட்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்ற பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக, உண்ணாவிரதம் உட்பட பல கட்ட போராட்டம் நடத்தியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்பு அகற்றாத நெடுஞ்சாலை துறையை கண்டித்து நேற்று அவிநாசி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் அவிநாசி உதவி கோட்ட பொறியாளர் மற்றும் அலுவலர்களை முற்றுகையிட்டனர். அவிநாசி அனைத்து வணிகர் சங்க தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது: அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டதால் கடந்த நான்கு ஆண்டுகளாக பல போராட்டங்கள் நடத்தினோம். இருந்தும், அகற்றப்படவில்லை. இதனால், விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் நடந்தது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் மனு கொடுத்து வந்தோம். தேர்த்திருவிழா முடிந்ததும் அகற்றுவதாக உறுதி தந்தும் கூட, நடவடிக்கை இல்லை. கடந்த இரண்டு மாதம் முன், ஆக்கிரமிப்பு கடைகளால் தாலுகா அலுவலகம் முன், 13 வயது சிறுவன் விபத்தில் உயிரிழந்தார். மீண்டும் விபத்து ஏற்படாமல் இருக்க, ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்று நடவடிக்கை தகவலறிந்து, போலீஸ் டி.எஸ்.பி. சிவகுமார், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாளை (வியாழன்) சேவூர் ரோட்டில் சூளையில் இருந்து துவங்கி, புதிய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி தருவதாக உறுதி அளித்தனர். இதனால், வணிகர் சங்க உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.