நவராத்திரி விழா கொண்டாட்டம்; கொலு பொம்மை விற்பனை துவக்கம்
உடுமலை; நவராத்திரி துவங்குவதையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதியில் கொலு பொம்மைகளின் விற்பனையும் ஆரம்பமாகியுள்ளது. புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் துவங்கி, பத்து நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுகிறது. விழாவின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. விழாவின் பத்தாவது நாள் விஜயதசமியாகவும் வழிபாடு நடக்கிறது. நவராத்திரி கொண்டாடும் ஒன்பது நாட்களுக்கும், அம்பாளை அழைக்கும் விதமாக, கொலு வைக்கும் வைபவம் வீடு மற்றும் கோவில்களில் நடக்கிறது. முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை அழைத்தும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் அருளைபெறவும், போற்றி வழிபாடு நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி, உடுமலையில் கொலு பொம்மைகளின் விற்பனையும் துவங்கியுள்ளது. தசாவதாரம், திருமணம், அஷ்டலட்சுமி, ஆண்டாள், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, ராமர் பாலம் கட்டுதல், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி பொம்மை செட்கள், கல்யாண ஊர்வலம், மாப்பிள்ளை அழைப்பு, டீக்கடை செட், பலுான் விற்பனை பொம்மை செட், ஐஸ் வண்டி, விநாயகர் கேரம் விளையாடும் பொம்மை செட், கைலாயத்தில் சுவாமிகள், வாராகி அம்மன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், கார்த்திகை பெண்கள், பஜனை செட் பொம்மைகள், விளக்கு பூஜை, மலைகோட்டை கோவில், திருமலை திருப்பதி, முளைப்பாரி, சீதா ராமருடன் லட்சுமணன் ஆஞ்சநேயர், துர்க்கை, பராசக்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன், என புதுவிதமான பொம்மைகளும் வந்துள்ளது. நடப்பாண்டில் கூடுதலாக திருவண்ணாமலை செட், விநாயகர் கோவில், சொர்க்க வாசல், ஆப்பக்கடை, பிரம்ம லோகம், இளநீர் கடை, பானி பூரி உள்ளிட்ட பொம்மைகள் புதிதாக வந்துள்ளன. பொம்மை செட்கள் ரூ. 600 துவங்கி, ரூ. 6 ஆயிரம் ரூபாய் வரையிலும், நுாறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் மதிப்பு வரை, தலா ஒரு பொம்மையும் விற்பனை செய்யப்படுகிறது.