திருப்பூர்: திருப்பூரில் நள்ளிரவில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூர் ஆர்.வி.இ. லே-அவுட்டை சேர்ந்தவர் திலீப், 28. இவர் அப்பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். கடையின் பாதுகாப்புக்காக 'ஏஐ' டெக்னலஜி கொண்ட அதிநவீன, இரண்டு 'சிசிடிவி' கேமராவை கடை முன் பொருத்தி உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணியளவில் அந்த ரோட்டில் நடந்து சென்ற இரண்டு போதை ஆசாமிகள், தகாத வார்த்தையில் பேசியபடி, ஒருவரை, ஒருவர் தாக்கியபடி நடந்து சென்றனர். அப்போது, மெடிக்கல் ஷாப்பை கடந்த போது, இருவரின் செய்கையை வீடியோ எடுத்த 'சிசிடிவி' உடனே, எச்சரிக்கை அலாரம் அடித்து, சிவப்பு நிறத்தில் விளக்கு ஒளிர்ந்தது. இதற்கிடையில், கேமராவில் இருந்து சத்தம் வருவதை பார்த்த போதை ஆசாமிகள், கற்களை எடுத்து வீசியதில், கேமரா சேதமடைந்தது. போதை ஆசாமிகள், கேமராவை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருட முயற்சி திருப்பூர், லட்சுமி நகரில் நிறுவனம் ஒன்றில், இரு நாட்களுக்கு முன், நள்ளிரவு நேரத்தில், மாஸ்க் அணிந்த படி, இருவர் பின்வழியாக திருட நுழைந்தனர். அங்கிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகாமல், திருப்பி விட்டு நோட்டமிட்டனர். சிறிது நேரம் சுற்றி பார்த்து விட்டு, திருட ஒன்றும் கிடைக்காத காரணத்தால், தப்பி சென்றனர். இக்காட்சி, அங்கிருந்த 'சிசிடிவி'யில் பதிவாகியிருந்தது. உள்ளே நுழைந்த நபர்களின் நடவடிக்கையை பார்த்தால் போதை ஆசாமிகளை போன்று இருந்தது. கார் சேதம் திருப்பூரை சேர்ந்த டிராபிக் வார்டன் முத்துபாரதி என்பவரின் வீட்டுக்கு அருகே தினமும் சிலர் மது அருந்தி விட்டு, பாதசாரிகள் நடக்கும் இடத்தில் பாட்டில்களை துாக்கி வீசி சென்று வருகின்றனர். சில நாள் முன், ரோட்டில் நிறுத்தியிருந்த கார் மூடியிருந்த கவரை கிழித்தும், பேனட்டில் ஏறி, கீறல்கள் போட்டுள்ளனர். தொடர்ந்து, அருகே நிறுத்தியிருந்த மற்றொரு காரின் நம்பர் பிளேட்டை உடைத்து சென்று விட்டனர். இதுதொடர்கதையாக உள்ளது. போதை தலைக்கேறி வாலிபர் அட்டகாசம் திருப்பூர் காங்கயம் ரோடு, மணியகாரம்பாளையத்தை சேர்ந்த ஹரிஹரசுதன், 24 என்பவர் மதுபோதையில், அப்பகுதியில் ரோட்டோரம் போடப்பட்டிருந்த பானிபூரி கடை, சிக்கன் சில்லி கடை, சரக்கு வாகனம், ஆட்டோ ஆகியவற்றை இரும்பு கம்பியால் தாக்கி சேதப்படுத்தினார். தொடர்ந்து, கடைக்காரர்களுடன் வாக்குவாதம் செய்தார். தகவலின் பேரில், நல்லுார் போலீசார் போதை நபரை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.