நாய்கள் குதறிய ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க இழுத்தடிப்பு
திருப்பூர்,; திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், தாராரபுரம், காங்கயம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளின் தோட்டங்களில் புகுந்து, பட்டிகளில் கட்டப்பட்டுள்ள ஆடு, கோழிகளை தெரு நாய்கள் கடிக்கின்றன; இதில், நுாற்றுக்கணக்கான தெரு நாய்கள், கோழிகள் இறந்தன.'இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், 'அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது; 45 நாட்களுக்குள் இழப்பீடு பெறறுக் கொடுக்கப்படும்' என, மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்திருந்தது.வாக்குறுதி அளித்து, 50 நாட்களை கடந்தும் இழப்பீடு தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், நேற்று முன்தினம், வெள்ளகோவில் ஸ்ரீமுத்துக்குமார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தினர்.இறந்து போன கால்நடைகளின் விவரப்பட்டியலுடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோரை சந்தித்து மீண்டும் ஒரு முறை மனு வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. அத்துடன், குடியரசு தினமான, 26ம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் கருப்புச்சட்டை அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தி, கால்நடைகளுடன் பங்கேற்பது எனவும் முடிவெடுத்துள்ளனர்.தீர்மானம் என்னாச்சு!'தெரு நாய்களால் பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, 17 கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கிராம சபையில் விளக்க வேண்டும் என வலியுறுத்தவும் விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.பாதிப்பு அதிகமுள்ள தாலுகாவில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருப்பது எனவும் முடிவெடுத்துள்ளனர். இடைப்பட்ட நாட்களில் தெரு நாய்களால் ஆடுகள் இறக்கும் பட்சத்தில், அவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.மாவட்ட நிர்வாகம் உள்ள அரசுத்துறை அலுவலர்களுடன் நடத்தப்படும் பேச்சு வார்த்தையில், பிராணிகள் வகை தடுப்புச்சங்க நிர்வாகிகளையும் இணைத்துக் கொள்வது எனவும், விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்
இழப்பீடு வழங்க என்ன சிக்கல்?
விவசாய அமைப்பினர் கூறியதாவது:தெருநாய்களால் கால்நடைகள் இறப்பதும், அதற்கு இழப்பீடு உள்ளிட்ட நிவாரணம் எதுவும் அரசால் அறிவிக்கப்படாமல் இருப்பதும், விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை, அரசு நன்கு உணர்ந்திருக்கிறது. இதனால் தான், ஈரோடு மாவட்டத்தில், அமைச்சர் முத்துசாமி, கட்சி சார்பில் நிதி செலவழித்து, தெரு நாய்களால் கடிபட்டு இறந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல்படுத்தினார்.தெருநாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடு, கோழிகளுக்கு அரசு, அதிகாரபூர்வமாக இழப்பீடு வழங்கிவிட்டால், மாநிலம் முழுக்க அதற்கெனவே பெரும் தொகை செலவழிக்க நேரிடும். இந்த நிதிச்சுமையில் இருந்து தப்பிக்க, தெரு நாய்களை கட்டுப்படுத்துவதே மேல் என்ற எண்ணம் அரசுக்கு ஏற்படும். அதன்படி, ஆடுகளுக்கான இழப்பீடு கோரிக்கை என்பது, 'தெரு நாய்களை கட்டுப்படுத்தியே தீர வேண்டும்,' என அரசு கொள்கை முடிவெடுக்க வைக்கப்படும் 'செக்' என்றும் சொல்லலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.