- நமது நிருபர் - கொங்கு மண்டலத்திலுள்ள சிவாலயங்களில் சிறப்பு பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், பிப்., 2ம் தேதி கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.அவிநாசி கோவிலில், ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றதும், நந்தியம்பெருமான், கொடிமரம், பலிபீடம் மற்றும் ஊர்த்துவ தாண்டவமூர்த்தி சிற்பத்தை தாங்கி நிற்கும் துாண்களுடன் காட்சியளிக்கிறது, நவரங்க மண்டபம்.சிவனும், சக்தியும் சமமென உணராமல், காளியம்மை உக்கிரமாக மாறினாள். சிவனை அடைய தில்லையில் தவம் இருந்த சக்திக்கு காட்சி கொடுக்காததால், காளியின் உக்கிரத்தால், தில்லைவாழ் மக்கள் பாதிப்படைந்தனர். ஆடல்வல்லானாகிய சிவபெருமானை, தன்னுடன் போட்டிக்கு ஆட வருமாறு காளியம்மை அழைத்தாள்.சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது போல், தில்லைக்காளியும், சிவபெருமானும் சமநிலையில், ஊர்த்துவ தாண்டவம் ஆடியபடி இருந்தனர். அண்ட சராசரமும் நடுங்கும் வண்ணம் ஆடிக்கொண்டிருந்தனர்; காதில் இருந்த குண்டலத்தை தரையில் விழச்செய்து, சிவபெருமான் கால் விரல்களால் எடுத்து காதில் மாட்டினார். தயாபரனே...
அப்போது இடதுகால் தரையில் ஊன்றியும், வலது காலை ஜடாமகுடம் வரை உயர்த்தியும், ஒரே நேர்கோட்டில் நின்றார். காலை உயர்த்தி ஆட விரும்பாத காளியம்மை, போட்டியில் பின்தங்கினாள்; சர்வலோக தயாபரனாகிய சிவனே வென்றார். காலை, சிரசு வரை உயர்த்தி ஆடிய தாண்டவமே ஊர்த்துவ தாண்டவம் எனப்படுகிறது.காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கவுரி தாண்டவம், சம்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம் மற்றும் ஆனந்த தாண்டவம் என, ஏழு தாண்டவம் இருக்கின்றன. இவற்றில், கனகசபையில் ஆடல்வல்லானாகிய நடராஜபெருமான் ஆடியபடி அருள்பாலிப்பதே, ஆனந்த தாண்டவம்.சிவபெருமானை நோக்கி, ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்த பார்வதி தேவியை, 'பெருங்கருணாலய செல்வி' என்கிற திருநாமத்துடன், எம்பெருமான் தனது வலப்பாகத்தில் அமர்த்திக்கொண்டதே அவிநாசி திருத்தலம். அத்தகைய காலத்தால் கணிக்க முடியாத திருப்புக்கொளியூர் கோவிலின், நவரங்க மண்டபத்தில், ஊர்த்துவ தாண்டவத்தை நேரில் காண்பது போன்ற திருக்கோலத்துடன், தெற்கு நோக்கியபடி எம்பெருமான் அருள்பாலிக்கிறார்.சிவனின் வலதுகால், கங்கை மற்றும் பிறை சூடிய ஜடாமகுடம் வரை உயர்த்தப்பட்டிருக்கும். முன்வலது கை, வரத முத்திரையுடனும், இடது கை ஜடாமகுடத்தை காண்பிப்பது போலவும் நிற்கிறார். விஸ்வரூபமான வடிவில், 16 கரங்களுடன் எம்பெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடும் போது, பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களும், அஞ்சி நிற்பது போல சிலை வடிவமைக்கபட்டிருக்கிறது. சக்தியே சிவம்
திரிசூலம், உடுக்கையும் கையுமாக, எட்டுக்கரங்களுடன் நடனமாடிய தில்லைக்காளி, ஆடல் வல்லானின் அசுரவேக நடனத்தால் மயங்கி, சமாதான சரணாகதி முத்திரையுடன், வடக்குமுகமாக, எம்பெருமானை நோக்கி நிற்கும் சிற்பமும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அவிநாசியப்பர் கோவிலுக்கு இவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்று அறுதியிட்டு கூற முடியாத அளவுக்கு, இந்திரன் உள்ளிட்ட தேவாதிதேவர்களும் பரம்பொருளை பூஜித்து அருளுக்கு பாத்திரமாகியிருக்கின்றனர். 'சக்தி இல்லையெல் சிவம் இல்லை' என்றாலும், சக்தியும் சிவனில் அடக்கம் என்பதை உணர்த்தும் வகையில், பார்வதிதேவி வலதுபாகம் பெற்ற அவிநாசியில், ஊர்த்துவ தாண்டவ திருக்கோலம் அற்புதமாக காட்சியளிக்கிறது.இந்த அற்புத காட்சியை கண்டு, எல்லாம்வல்ல அவிநாசியப்பரை பணிந்து அருள்பெறுவோம் என்று ஆவலுடன் பக்தர்கள் காத்திருக்கின்றனர். அந்த பொன்னாளும், பிப்., 2ம் தேதி வருகிறது. அனைவரும் நவரங்க மண்டபத்தில், ஊர்த்துவ தாண்டவமாடும் சர்வேஸ்வரனையும், காளியம்மையையும் கண்டு உளமுருக வேண்டி, சிவசக்தியின் பேரருளுக்கு பாத்திரமாகலாம்!