உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மைப்பணியாளர்கள் 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம்; குறைந்தபட்ச சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வி

துாய்மைப்பணியாளர்கள் 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம்; குறைந்தபட்ச சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம் வழங்குவது தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்தது. வரும் 30ம் தேதி முதல் அனைத்து உள்ளாட்சிகளிலும் காலவரைற்ற வேலைநிறுத்தத்தில் துாய்மைப்பணியாளர் ஈடுபடுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்கள், ஓட்டுனர்கள், பம்ப் ஆபரேட்டர் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என, சி.ஐ.டி.யு., திருப்பூர் மாவட்ட செயலர் ரங்கராஜ், கடந்தாண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.இதையேற்று, 'உள்ளாட்சிகளில் பணிபுரியும், தினக்கூலி மற்றும் தனியார் கான்ட்ராக்ட் நிறுவனத்தினரிடம் பணிபுரியும் துாய்மைப்பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்' என, கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும், குறைந்தபட்ச சம்பளம் வழங்காமல், இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது.தொழிலாளர் நலத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உன்னிக்கிருஷ்ணன், செயலாளர் ரங்கராஜ், ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைர் பழனிசாமி, பூண்டி கிளை தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர்; இதில், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.நிர்வாகிகள் கூறுகையில், 'குறைந்தபட்ச சம்பளம் வழங்கும் விவகாரத்தில் இன்னும் ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஏற்கனவே, ஓராண்டு காலம் அவகாசம் வழங்கிவிட்ட நிலையில், மீண்டும் காலநீட்டிப்பு செய்ய, தொழிலாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். குறைந்தபட்ச சம்பளம் வழங்கும் கோர்ட் உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தவறினால் வரும், 30ம் தேதி முதல், அனைத்து உள்ளாட்சிகளிலும் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.---

சம்பளம் எவ்வளவு?

தற்போதைய நிலவரப்படி, அரசின் குறைந்தபட்ச ஊதியமாக, துாய்மைப் பணியாளர்களை பொறுத்தவரை, மாநகராட்சிகளில், 878 ரூபாய்;, நகராட்சிகளில், 744 ரூபாய்; பேரூராட்சிகளில், 655 ரூபாய் வழங்கப்பட வேண்டும். குடிநீர் ஆபரேட்டர் மற்றும் ஓட்டுனர்களுக்கு, மாநகராட்சியில், 921 ரூபாய்; நகராட்சியில், 833 ரூபாய்; பேரூராட்சிகளில், 744 ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைப்பணியாளர் மற்றும் குடிநீர் ஆபரேட்டர்களுக்கு, 14,780 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்பட வேண்டும்.- ரங்கராஜ்,மாவட்ட செயலர்,சி.ஐ.டி.யு., ம


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி