கோவில் கும்பாபிேஷகப் பணிகள் ஆக்கிரமிப்பு அகற்றாததால் சிக்கல்
பல்லடம்: பல்லடம் அடுத்த கே.அய்யம்பாளையம் கிராமத்தில் மதுரை வீரன் மற்றும் கதிர் ராயர் பெருமாள் கோவில்கள் உள்ளன. கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் பொது வழித்தடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், தினசரி, பிரச்னையில் ஈடுபட்டு வருவதாகவும், பொதுமக்கள் சார்பில், கோவில் நிர்வாகிகள் பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர்.நிர்வாகிகள் கூறியதாவது: ஏறத்தாழ 10 தலைமுறைகளாக நாங்கள் வழிபட்டு வரும் கோவிலை ஒட்டியுள்ள கோவில் நிலம் மற்றும் பொது வழித்தடம் ஆகியவை தனியார் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, வரும் ஜூன் மாதம் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கோவில் புனரமைப்பு மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முயற்சித்தால், ஆக்கிரமிப்பாளர்கள் பிரச்னையில் ஈடுபடுகின்றனர். கோவில் நிலத்தில்கட்டுமான பொருட்களை வைத்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். 3 தாசில்தார் மாறியும் தீர்வுதான் இல்லை
கோவில் நிலம் மற்றும் பொது வழித்தடத்தை மீட்டுத் தர கோரி, கடந்த நான்கு ஆண்டுகளாக மனு அளித்துள்ளோம். இதுவரை, மூன்று தாசில்தார்கள் இடம் மாறிவிட்டனர். இருப்பினும், பிரச்னைக்கு மட்டும் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. கடந்த, 2023ம் ஆண்டு அளவீடு பணி மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இருப்பதை உறுதி செய்தனர். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் கும்பாபிஷேக பணிகள் தடைபட்டு வருகின்றன. அமைதியாக உள்ள கிராமத்தில், இது, வன்முறையை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றி, கோவில் நிலம் மற்றும் பொது வழித்தடத்தை மீட்க வேண்டும் என்றனர்.
போலீஸ் கைவிரிப்பு
மனுவைப் பெற்றுக் கொண்ட போலீசார், ''இது, இடப் பிரச்னை என்பதால் வருவாய்த் துறையினர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அறிவுறுத்தினர். இதையடுத்து தற்போதைய தாசில்தாரை பார்க்க கோவில் நிர்வாகிகள் புறப்பட்டனர்.