திருப்பூர்: பேரூராட்சியாக இருந்த, திருமுருகன்பூண்டி, கடந்த, நான்காண்டுக்கு முன், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. எல்லை விரிவாக்கம் எதுவும் செய்யப்படாமல், ஏற்கனவே இருந்த, 15 வார்டுகள், 27 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், கமிஷனர் துவங்கி அதிகாரிகள் மட்டத்திலான பொறுப்பு, கடந்த, 2 ஆண்டாக காலியாக உள்ளது.கடந்த, 19 மாதமாக கமிஷனர் பணியிடம் காலியாக இருக்கிறது. அருகேயுள்ள நகராட்சி கமிஷனர்கள் தான், கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். அதே போன்று, கடந்த, 7 மாதமாக, இளநிலை உதவியாளர் பணியிடம்; 3 ஆண்டாக நகரமைப்பு அலுவலர் பணியிடம் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் அனைத்தும் காலியாகவே உள்ளன. இதனால் நிர்வாகப்பணிகள் முடங்குவதாக, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, பூண்டி நகராட்சி தலைவர் குமார் கூறியதாவது: நகராட்சி எல்லையில், பழைய சேதமடைந்த தார் சாலைகள் சரி செய்யப்பட வேண்டும். பழுதடைந்துள்ள கால்வாய்கள் சீரமைக்கப்பட வேண்டும். மண் சாலைகள், தார் சாலைகளாக மாற்றப்பட வேண்டும்; அம்பேத்கர் காலனி மக்கள் தார் சாலை கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைத்திருக்கின்றனர். இதுபோன்ற பல பணிகள் நிறைவேற்ற வேண்டும். கடந்த, 20 மாதமாக, நிரந்தர கமிஷனர் இல்லை; கடந்த, 3 ஆண்டாக ஓவர்சீயர் பணியிடமும் நிரப்பப்படவில்லை. இதனால், நிர்வாகப்பணிகள் பாதிக்கிறது; கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என, துறை அமைச்சர் மற்றும் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் கொடுத்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.