| ADDED : ஜூலை 20, 2024 10:53 PM
பல்லடம்:பழைய நுாலகக் கட்டடம் உருப்படியில்லாமல் இருக்கும் நிலையில், புதிதாக நுாலக கட்டடம் தேவைதானா என, பல்லடம் அருகே அனுப்பட்டி கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பட்டி கிராமத்தில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள, 10 சென்ட் இடத்தில் புதிதாக நுாலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அஸ்திவாரத்துக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதற்கு இப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், 'அனுப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே நுாலகம் உள்ளது. ஆனால், போதிய பராமரிப்புகள் இன்றி முறையாக செயல்படுவதில்லை. இதற்கிடையே, புதிதாக நுாலக கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. புதிய நுாலக கட்டடம் கட்டப்படும் இடத்தை கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பலர் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சி செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். கிராமத்தில், விளையாடுவதற்கு என வேறு இடம் இல்லாத நிலையில், இளைஞர்கள் இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த இடத்தில் நுாலகம் கட்டினால், இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி பறிபோகும் நிலை உள்ளது.ஊராட்சியில், ஏற்கனவே உள்ள பழைய நுாலகம் உருப்படி இல்லாமல் உள்ளது. இதில், புதிதாக நுாலகம் கட்டுவதால் யார் பயன்பெறப் போகிறார்கள்? இருப்பினும், நுாலகம் கட்ட விரும்பினால், வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் அல்லது இளைஞர்கள் விளையாட மாற்று இடத்தை தர வேண்டும்' என்றனர்.