விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் மரணம்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 58. கடந்த 29ம் தேதி அவரை புலிப்பல் வைத்திருந்ததாக கூறி, வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், வனத்துறை அலுவலகத்தில் உள்ள குளியலறையில் அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என வனத்துறையினர் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாரிமுத் துவின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் கிராமத்தினர் அங்கு திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் அவரை அடித்து துன்புறுத்தியதால் தான் அவர் உயிரிழந்தார் என்று குற்றம் சுமத்தினர். போலீசார், வருவாய் துறையினர் சமரசம் ெசய்து, சடலத்தை திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று காலை, உடுமலை மாஜிஸ்திரேட் நித்யகலா முன்னிலையில் மருத்துவர் குழு பிரேத பரிசோதனை நடத்தியது. பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடுமலை ஆர்.டி.ஓ., குமார், டி.எஸ்.பி., நமசிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மருத்துவமனை வளாகத்தில் மாரிமுத்துவின் உறவினர்கள் திரண்டிருந்தனர். அவரது குடும்பத்தினர் அடையாளம் உறுதிப்படுத் திய பின், உடல் பிரேத பரிசோதனை நடந்தது. தர்ணாவால் பரபரப்பு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அங்கு திரண்டிருந்த உறவினர்களும், மா.கம்யூ., கட்சியினர் உள்ளிட்டோரும், பிரேத பரிசோதனை கூடத்துக்கு முன் அமர்ந்து, சடலத்தை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை வழங்கவேண்டும். இந்த வழக்கை, வன் கொடுமை சட்டத்தில் சேர்க்கவேண்டும். சி.பி.சி.ஐ.டி., விசாரணைநடத்த வேண்டும் என, தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, இரவு, 8:00 மணியளவில் சடலத்தை பெற்றுக்கொண்டு புறப்பட்டனர். வனத்துறையினர் இருவர் 'சஸ்பெண்ட்' இச்சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி, முதற்கட்டமாக, ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக வனவர் நிமல், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.