உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கறிக்கோழி உற்பத்தி நிறுத்த போராட்டம் துவங்கியது

 கறிக்கோழி உற்பத்தி நிறுத்த போராட்டம் துவங்கியது

பல்லடம்: கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கறிக்கோழி பண்ணை வளர்ப்பு விவசாயிகள் நேற்று முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. கறிக்கோழி தீவனங்கள் மற்றும் தேங்காய் மஞ்சி, மருந்துகள் உள்ளிட்ட மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக, கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கறிக்கோழி பண்ணை வளர்ப்பு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, கறிக்கோழி வளர்ப்பு கூலி, கிலோவுக்கு, 6.50ல் இருந்து, 20 ரூபாயும், நாட்டுக் கோழிகளுக்கு, 25 ரூபாயும், காடை கோழிகளுக்கு, 7 ரூபாயுமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி நேற்று (ஜன. 1ம் தேதி) முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை பண்ணையாளர்கள் துவக்கியுள்ளனர். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கறிக்கோழி பண்ணை வளர்ப்பு விவசாயிகள் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் கூறியதாவது: மூலப்பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், கறிக்கோழி வளர்ப்பு கூலி மட்டும் உயரவில்லை. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, கோரிக்கைகள் நிறைவேறும் வரை, உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகளில் உற்பத்தி நிறுத்த போராட்டம் இன்று (நேற்று) முதல் துவங்கியது. முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். உரிய தீர்வு ஏற்படாவிடில், சென்னை கால்நடைத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை