உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / குட்கா பயன்படுத்திய மாணவர் எஸ்.பி., அறிவுரையால் மனமாற்றம்

குட்கா பயன்படுத்திய மாணவர் எஸ்.பி., அறிவுரையால் மனமாற்றம்

திருச்சி:திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள ஜெம்புநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் விக்னேஷ்வரன், 22. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், நண்பர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஊக்க சக்தி பெறுவதற்காக, 'ஹான்ஸ்' எனும் புகையிலையை பயன்படுத்தினார். அதன் பின், சிக்சர் அடிப்பது போல, பேஸ்புக் சமூகவலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டார். இதுகுறித்து அறிந்த, திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார், 'தடை செய்யப்பட்ட புகையிலை பொருளை பயன்படுத்தியவர் கல்லுாரி மாணவர் என்பதால், அவரது எதிர்காலம் கருதி வழக்கு பதிய வேண்டாம்' என தெரிவித்தார்.மேலும், அந்த மாணவரையும், அவரது பெற்றோரையும் அழைத்து, மாணவருக்கு அறிவுரைகள் கூறி, 'இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது' என்று கூறி, அனுப்பி வைத்தார். இதனால் நெகிழ்ச்சி அடைந்த அந்த மாணவர், 'நான் வெளியிட்ட ரீல்ஸ் ஆபத்தானது. அதுபோன்ற வீடியோக்களை யாரும் வெளியிடக்கூடாது, புகையிலை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்' என பேசி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மாணவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அறிவுரை கூறிய எஸ்.பி., வருண்குமாரின் செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !