| ADDED : ஜூலை 26, 2011 12:28 AM
மணப்பாறை: மணப்பாறை அருகே சிறைகைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சிறைக்கு அழைத்து வந்தபோது, சிறை வாசலிருந்து தப்பியோடினார். கைதியை போலீஸார் துரத்திப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், தோகமலை, திண்ணியம்பாளையத்தை சேர்ந்த ரத்தினம் மகன் சக்தி என்கிற சக்திவேல் (30). இவரை வளநாடு போலீஸார் திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். மணப்பாறை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் நீடிப்பு செய்வதுக்காக வளநாடு போலீஸார் இரண்டு பேர், சிறைக்கைதி சக்திவேலை மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தக்கு அழைத்துச் சென்று, நீதிபதி ஹஸன் முகமது முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கிளை சிறையில் அடைப்பதுக்காக சக்திவேலை அழைத்து வந்தனர். மணப்பாறை தாலுகா அலுவலக நுழைவாயில் அருகே வந்தபோது, சக்திவேல், போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடினார். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அவரை அழைத்து வந்த இரண்டு போலீஸாரும், அவரை பின்னாலேயே துரத்திச் சென்று கரிக்கான்குளம் தெருவில் மடக்கிப்பிடித்தனர். மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர். கைதியை துரத்திப்பிடித்ததால் பாதுகாப்பு போலீஸார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிய சிறைக்கைதியை போலீஸார் துரத்திப்பிடித்த சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.