| ADDED : ஜன 25, 2024 01:01 PM
கே.வி.குப்பம் : வேலுார் அருகே, தொகுப்பு வீடு கான்கிரீட் தளத்தை புனரமைக்கும் பணியின்போது, கான்கிரீட் தளம் இடிந்ததில், இடிபாட்டில் சிக்கி தொழிலாளி பலியானார். வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கணேஷ், 50; இவர், 25 ஆண்டுகளுக்கு முன், அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தொகுப்பு வீடு கான்கிரீட் தளம் சேதமானதால், அதை சீரமைக்கும் பணியில் கடந்த, 2 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த நாகராஜன், 26, பொன்னரசு, 22, அறிவழகன், 21, ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் மாலை பணியின்போது, கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் நாகராஜன், பொன்னரசு மற்றும் அறிவழகன் இடிபாட்டில் சிக்கினர். இதில் அறிவழகன் பலியானார். நாகராஜன், பொன்னரசு படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். கே.வி.குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.