| ADDED : ஜூலை 14, 2011 12:13 AM
செஞ்சி : செஞ்சியில் கழிவு நீர் வாய்க்கால் கட்டும் பணி மந்தமாக நடந்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட தேசூர் பாட்டையில் புதிதாக கழிவு நீர் வாய்க்கால் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கடை மற்றும் வீடுகளுக்கு முன்பு ஆழமான பள்ளம் எடுத்துள்ளனர். வீடுகளுக்கும், கடைக்கும் செல்ல மர பலகைகளைக் கொண்டு தற்காலிக வழி ஏற்படுத்தி உள்ளனர். இதன் மீது வயதானவர்களும், குழந்தைகளும் செல்ல முடியவில்லை. கடை நடத்துபவர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் உள்ளவர்கள் கழிவு நீரை வெளியேற்ற முடியாமலும், குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடிக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். செஞ்சியில் காந்தி பஜாருக்கு அடுத்த படியாக போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக தேசூர் பாட்டை உள்ளது. இங்கு மணல், ஜல்லி ஆகியவற்றை நீண்ட நாட்களாக கொட்டி வைப்பதால் பொதுமக்கள் இடையூறுகளுக்கு ஆளாகின்றனர். மந்த கதியில் நடந்து வரும் கழிவு நீர் வாய்க்கால் கட்டும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.