| ADDED : ஆக 21, 2024 06:52 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தை குப்பை கிடங்காக பயன்படுத்தி வருவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்ததால், புதியதாக நகராட்சி கட்டடம் கட்டப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. இந்நிலையில், பழைய நகராட்சி அலுவலக வளாகம் பயன்படுத்தாமல், நகரத்தில் சேமிக்கும் குப்பை கழிவுகளை திறந்த வெளியில் கொட்டி வருவதால், அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.அந்த பகுதியில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், நகராட்சி மகப்பேறு மருத்துவமனை, நகராட்சி பூங்கா போன்றவை உள்ளதால், அங்கு வருபவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகத்தை குப்பை கிடங்காக பயன்படுத்தி வரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அகிலன் தலைமை தாங்கினார். யாதும் ஊரே யாவரும் கேளீர் பொது நலச்சங்கச் தலைவர் நாராயணன், தமிழ் இளைஞர் கூட்டமைப்பின் நிர்வாகி பாபு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.