| ADDED : மே 24, 2024 05:55 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் கோஷ்டி பூசல் காரணமாக, கருணாநிதி பிறந்த நாள் விழாவிற்காக வைக்கப்பட்டுள்ள பேனரை போலீசார் அகற்றும்படி கூறியதால் பரபரப்பு நிலவியது.திண்டிவனத்தில் தி.மு.க.,வில் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் மஸ்தான் தலைமையில் தனித்தனியாக 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருவது கட்சி தலைமைக்கும் தெரிந்த விஷயம்தான். தி.மு.க.,விழாக்கள் அனைத்தும் 2 கோஷ்டியினரும் தனித்தனியாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது. இதற்காக 2 கோஷ்டியினரும் பேனர் வைத்து வருகின்றனர். மஸ்தான் ஆதரவாளர்கள் அவரது படத்தை மட்டும் போட்டும், பொன்முடி ஆதரவாளர்கள் பொன்முடியின் படத்தை பெரிய அளவிலும், மஸ்தான் படத்தை சிறிய அளவிலும் போட்டும் பேனர் வைத்துள்ளனர்.திண்டிவனம் தாலுகா அலுவலகம், காமராஜர் சிலை அருகே பொன்முடியின் ஆதரவாளரான 17வது வார்டு கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.இந்த பேனரில், மஸ்தான் படம் சிறிய அளவிலும், பொன்முடி படம் பெரிய அளவிலும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த பேனரை மட்டும் அகற்ற வேண்டும் என திண்டிவனம் டவுன் போலீசார், கவுன்சிலர் தரப்புக்கு நெருக்கடி கொடுத்தனர்.இதற்கு கவுன்சிலர் தரப்பினர் பிற கட்சியினர் வைத்துள்ள பேனருக்கு வாய் திறக்காமல் நாங்கள் வைத்த பேனரை மட்டும் எதற்கு எடுக்கச் சொல்கிறீர்கள் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.இந்த பிரச்னையை கவுன்சிலர் தரப்பினர் டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியனிடம் கொண்டு சென்றனர். அதற்கு அவர், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இருப்பினும், டவுன் போலீசார் நெருக்கடி கொடுத்த அந்த பேனர் இன்னும் அதே இடத்தில்தான் இருக்கிறது.