| ADDED : ஜூலை 17, 2024 12:17 AM
திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க.,வினர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.திண்டிவனம் நகராட்சியில், 265 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.இதற்காக அனைத்து வார்டு களிலும் சாலைகள் தோண்டப்பட்டு, மேன் ேஹால் அமைப்பது, பைப்புகள் புதைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது.முக்கிய சாலைகளான நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, ராஜாஜி சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு ஆகிய இடங்களில் பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் புதியதாக சாலைகள் போடப்படவில்லை. இதனால், புழுதி பறந்து நகர மக்கள், வாகன ஓட்டிகள் தினமும் அவதியடைந்து வருகின்றனர்.இந்நிலையில், நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டிக்கும் வகையில், எம்.எல்.ஏ., அர்ஜூனன் தலைமையில் அ.தி.மு.க., வை சேர்ந்த கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று மதியம் 12:00 மணியளவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 12:30 மணியளவில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரமேஷ் எம்.எல்.ஏ.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, இளநிலை பொறியாளர் ராமு உடனிருந்தனர்.அப்போது, நகராட்சி சார்பில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு 2 கோடி ரூபாய் நிதி விரைவில் ஒதுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் நேரு வீதியில் புதியதாக சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.