| ADDED : ஜூன் 10, 2024 01:28 AM
விழுப்புரம் : பள்ளிகள் திறப்பையொட்டி ஏராளமானோர் வெளியூர்களுக்கு புறப்பட்டதால் விழுப்புரம் பஸ் நிலையத்தில் போதிய பஸ்கள் இன்றி பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.விழுப்புரம் மாவட்டத்தில், இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகிறது. இதனால், விழுப்புத்திலிருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் மாணவர்கள், பெற்றோர் நேற்று பிற்பகல் முதல் புறப்பட்டு சென்றனர். இதனால், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மதியம் 3:00 மணி முதல் பயணிகள் கூட்டம் அதிகரித்திருந்தது.குறிப்பாக சென்னை, திருச்சி மார்க்க பஸ்களைப் பிடிக்க பயணிகள் பஸ் நிலைய வாயில் பகுதியிலேயே நின்று, முண்டியடித்து ஏறினர்.மேலும், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை மார்க்கங்களில் செல்வதற்கு போதிய பஸ் இல்லாமல், ஏராளமான பயணிகள் தவித்தனர்.தொடர்ந்து இரவு 7:00 மணி வரை திருச்சி, சேலம், சென்னை மார்க்க பஸ்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை போல், திருச்சி, சேலம், திருவண்ணாமலை, பெங்களூரு மார்க்கங்களிலும், சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.