இரவு, பகலாக ரோந்தில் ஈடுபடும் நாய், மாடுகள் : மரண பீதியில் இரண்டு மாவட்ட பொதுமக்கள்
வி ழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாய்களும், மாடுகளும் இரவு பகலாக நகரைச் சுற்றித் திரிவதால் நகர மக்கள் மரண பீதியில் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுதும் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில் செஞ்சியில் நாயுடன் சேர்ந்து மாடுகளின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட நாய்கள், மாடுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி உள்ளது. சாலையில் திரியும் நாய்கள் குறுக்கே வருவதால் தினமும் ஏதாவது ஒரு தெருவில் விபத்து நடந்து படுகாயம் அடைகின்றனர். நாய்கள் கடித்து சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எம்.ஜி.ஆர்., நகரில் நாய்கள் கடித்ததால் மாட்டிற்கு ரேபிஸ் தாக்குதல் இருந்ததை கால்நடை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர். தெருநாய்கள் தங்குவதற்கும், குட்டி போட்டு பராமரிக்கவும் இடமின்றி, கேட் இல்லாத வீடுகளிலும், காலி மனைகளிலும் தங்கி விடுகின்றன. நாய்கள் குட்டி போட்டிருந்தால் வீடுகளில் இருந்தும் விரட்ட முடிவதில்லை. விரட்டினால் ஆக்ரோஷத்துன் கடிக்க பாய்கின்றன. நாய்களால் ஏற்படும் தொல்லை குறித்து ஏராளமானவர்கள் பேரூராட்சி, நகராட்சிகளில் புகார் செய்து வருகின்றனர். நாய்களை போல் கட்டுகடங்காமல் மாடுகளும் பெருகிவிட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திண்டிவனம் சாலையில் பைக்கில் வந்த செங்கத்தைச் சேர்ந்த இளைஞர் மாடு முட்டி பஸ்சில் விழுந்து இறந்தார். விழுப்புரம் சாலையில் மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் சென்ற மீனம்பூரை சேர்ந்த இளைஞர் விபத்தில் சிக்கி இறந்தார். கடந்த 1ம் தேதி செஞ்சி கூட்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த மணியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முத்து, 45; என்பவரை வேகமாக ஓடி வந்த மாடு பின்பக்கம் முட்டி கீழ தள்ளியதில் மண்டை உடைந்து அதே இடத்தில் மயங்கி விழுந்தார். செஞ்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்களாலும், மாடுகளாலும் பொது மக்கள் மத்தியில் மரண பயத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே நாய், மாடுகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏலம் விட வேண்டும் மாடுகள் சாலைகளில் சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி, பேரூராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி 3 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் தீர்மானத்தை செயல்படுத்தவில்லை. தீர்மானம் மட்டும் பிரச்னையை தீர்க்காது. நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் கலெக்டர் அனுமதி பெற்று சாலையில் சுற்றி திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கால அவகாசத்துடன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதன் பிறகும் மாடுகளை கட்டுப்படுத்தாமல் இருந்தால், நாளிதழ், பொது இடங்களிள் தேதி குறிப்பிட்டு விளம்பரம் செய்ய வேண்டும். இதன் பிறகும் உரிமையாளர்கள் அலட்சியம் காட்டினால் சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அருகாமையில் நடக்கும் வார சந்தையில் வீடியோ பதிவுடன் பொது ஏலம் விட வேண்டும். இதுபோன்று சட்ட நடவடிக்கை எடுத்தால் சாலைகளில் மாடுகளை திரிய விடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.