| ADDED : டிச 01, 2025 05:26 AM
மயிலம்: மயிலம் அருகே மின்சாரம் தாக்கி மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற பசு மாட்டுடன் விவசாயி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மயிலம் அடுத்த பெரமண்டூர் புது குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 55; விவசாயி. இவர், நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு வழக்கம் போல் வீட்டில் இருந்து மேய்ச்சலுக்கு பசு மாட்டை ஓட்டிச் சென்றார். அப்போது காற்றுடன் மழை பெய்ததால், அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மதித்தவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லப்பட்ட பசுவும் இறந்தது. இந்நிலையில், மாலையில் வெகுநேரமாக சுப்ரமணி திரும்பி வராததால், அவரது உறவினர்கள் அவரை தேடினர். இரவு 10:00 மணியளவில் பெரமண்டூர் அய்யனார் கோவில் அருகே மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.