| ADDED : பிப் 06, 2024 06:02 AM
விழுப்புரம், : முன்னாள் டி.ஜி.பி., யின் மேல்முறையிட்டு வழக்கில், மேலும் அவகாசம் வழங்க நீதிபதி மறுத்துவிட்டதால், வழக்கு விசாரணை இன்று தொடர்கிறது.பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றம் அளித்த சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இவ்வழக்கு விசாரணையில் தொடர்ந்து அவகாசம் பெற்று வந்த ராஜேஷ்தாஸ், நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் கோர்ட்டில் ஆஜராகி, தனது தரப்பு வாதத்தை பதிவு செய்து வருகிறார்.மூன்றாம் நாளாக நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு ராஜேஷ்தாஸ் ஆஜரானார். அவரது வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதத்தை கூறிய பின், தொடர்ந்து வாதிட ஒருநாள் அவகாசம் கோரினார்.அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி பூர்ணிமா, 'ஏற்கனவே கடந்த 3ம் தேதி வழங்கப்பட்டது. மீண்டும், மீண்டும் அவகாசம் வழங்க முடியாது, நாளை (இன்று) 6ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராகி வாதிட வேண்டும். 7ம் தேதிக்குள் உங்கள் தரப்பு வாதத்தை முடித்தால்தான் அரசு தரப்பு பதில் தாக்கல் செய்வார்கள்' என்றார்.