வழக்கறிஞர் கொலை செஞ்சியில் சாலை மறியல்
செஞ்சி : திருவண்ணாமலையில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து செஞ்சியில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் செய்தனர்.திருவண்ணாமலை சேர்ந்த வழக்கறிஞர் காமராஜ் செஞ்சியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் காமராஜ் கொலை செய்யப்பட்டார். இதனால் கடந்த 3 நாட்களாக செஞ்சியில் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று காலை 10:00 மணிக்கு, அட்வகேட் அசோசியேசன் தலைவர் கலியமூர்த்தி, பார் அசோசியேஷன் தலைவர் பிரவீன் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற கேட் அருகே தர்ணா போராட்டம் நடத்தினர். காலை 10.20 மணிக்கு திடீரென செஞ்சி - திண்டிவனம் சாலையில், நீதிமன்றம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது வழக்கறிஞர் களையும், நீதிபதிகளையும் பாதுகாக்க தனி சட்டம் இயற்ற வேண்டும், வழக்கறிஞர்களை கொலை செய்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.டி.எஸ்.பி., மனோகரன் வழக்கறிஞர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்று கொண்டார். இதில் மூத்த வழக்கறிஞர்கள் வெற்றிசெல்வன், மழைமேனி பாண்டியன், அசாருதின், ஆறுமுகம், தர்மலிங்கம், புண்ணியகோட்டி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டர்.