| ADDED : நவ 26, 2025 07:30 AM
வானுார்: வானுார் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்து, கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். வானுார் அடுத்த ராவுத்தன்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுரளி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் 72 புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில் கார் ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்ததில், ராணிப்பேட்டை மாவட்டம், சயனாவரம் பகுதியைச் சேர்ந்த திருமால், 51; என்பதும், உறவினரின் விசேஷத்திற்கு நண்பர்களுக்கு விருந்தளிக்க மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.