வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குப்பை காடாக மாற போகிறது என்பது நிச்சயம்...
செஞ்சி;செஞ்சி கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்ததை தொடர்ந்து செஞ்சி கோட்டையை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. இதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலா தலமாக செஞ்சி கோட்டை உள்ளது. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி செஞ்சி கோட்டையை உலக பராம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. அதுவரை, செஞ்சி கோட்டையின் பிரம்மாண்டமும், பெருமையும், தொன்மையும் வெளி உலகிற்கு அதிக அளவில் தெரியாமல் இருந்தது. அதிகரிப்பு யுனெஸ்கோவின் அறிவிப்பால் தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செஞ்சி கோட்டைக்கு வருகை தருகின்றனர். இதற்கு முன்பு வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 பேர் வருகை தந்தனர். இப்போது 500 பேர் வரை வருகின்றனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும். இங்கு 15 வயதுக்கு குறைவானர்களுக்கு கட்டணம் இல்லை. செஞ்சி கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கு முன்பே இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வரலாற்று இடங்களில் செஞ்சி கோட்டை ஐந்தாவது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடிப்படை வசதிகள் இதற்கு முன்பே செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லை. இதை அதிகரிக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரித்து வருவதால் வாய்ப்புள்ள இடங்களில் சர்வதேச தரத்தில் கூடுதல் கழிவறைகளை அமைக்க வேண்டும். செஞ்சி கோட்டையின் உள்ளேயும், வெளியேயும் போதிய அளவிற்கு குடிநீர் வசதி இன்றி பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவர்களுக்காக கமலக்கண்ணியம்மன் கோவில், வெங்கட்ரமணர் கோவில், சிவன் கோவில், ராஜகிரி கோட்டை டிக்கட் கவுண்டர் ஆகிய இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்ய வேண்டும். பாதுகாப்பு செஞ்சி கோட்டை 1200 ஏக்கர் பரப்பளவில் மலையும், காடும் சூழ்ந்த பகுதி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக விரோதிகளின் நடமாட்டம் இருந்தது. வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து புறக்காவல் நிலையம் துவங்கப்பட்டு, இரண்டு போலீசார் பணியமர்த்தப்பட்டனர். சமூக விரோதிகளின் நடமாட்டம் கட்டுக்குள் வந்தது. இப்போது இந்த புறக்காவல் நிலையத்தை மூடி வைத்துள்ளனர். இதை மீண்டும் திறந்து சுற்றுலா பயணிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் உள் பகுதியில் யாரேனும் வீண் தகராறில் ஈடுபட்டாலும், குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்தாலும் குற்றவாளிகளை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இங்குள்ள டிக்கட் கவுண்டர்கள், ராஜகிரி கோட்டை நுழைவு பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். 1200 ஏக்கர் பரப்பளவும், 800 அடி உயர மலை உச்சிக்கும் செல்லும் சுற்றுலா பயணிகள் குறித்த நேரத்தில் மலையில் இருந்து இறங்கி வரவும், எதேனும் அவசர தகவல்களை தெரிவிக்கவும், உடன் வந்தவர்களை பிரிந்து வந்தவர்கள் குறித்து அறிவிக்கவும் கோட்டையில் ஒலி பெருக்கி வசதி செய்ய வேண்டும். பேட்டரி கார் செஞ்சி கோட்டையில் அதிக பார்வையாளர்கள் வரும் ராஜகிரி கோட்டையின் விசாலமான தரைப்பகுதியை வயதானவர்கள் நடந்து சென்று பார்க்க முடியவில்லை. இவர்களுக்காக பேட்டரி கார்களை இந்திய தொல்லியல் துறை ஏற்பாடு செய்ய வேண்டும். செஞ்சி நகரில் இருந்து செஞ்சிகோட்டை 2 கி.மீ., தொலைவில் உள்ளது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர். இந்த நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்காக செஞ்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து தனியார் அல்லது அரசு போக்குவரத்து கழகம் மூலம் மினி பஸ்களை ஏற்பாடு செய்ய வேண்டும். டூரிஸ்ட் கைடுகள் அவசியம் செஞ்சியை சுற்றி பட்டாபிராமர் கோவில், திருநாதர் குன்று, சிங்கவரம் ரங்நாதர் கோவில், பனமலை தாளகீரிஸ்வரர் கோவில், தளவானுார், மண்டகப்பட்டு குடைவரை கோவில்கள், மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவில் ஆகியன உள்ளன. செஞ்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதை அறிந்திருக்க வில்லை. எனவே சுற்றுலாத்துறை மூலம் அரசு அங்கீகாரம் பெற்ற சுற்றுலா கைடுகளை நியமிக்க வேண்டும். பார்க்க வேண்டிய இடங்கள் செஞ்சி கோட்டையில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ள. அவை எங்குள்ளன. எப்படி செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகை இங்கு இல்லை. பார்க்க வேண்டிய இடங்களின் படங்களுடன் கூடிய அறிவிப்பு பலகையை இந்திய தொல்லியல் துறை அமைக்க வேண்டும். செஞ்சி கோட்டைக்கு வெளியே கேன்டீன் வசதி உள்ளது. இதே போல் ராஜகிரி கோட்டையின் உள் பகுதியில் ஆவின் பூத் அமைத்து டீ. காபி, பால் மற்றும் ஆவின் தின்பண்டங்கள் விற்பனையை துவக்க வேண்டும். செஞ்சி கோட்டையில் படகு சவாரி, தங்கும் விடுதி, ஓட்டல் வசதி என நீண்ட கால கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றாமல் உள்ளனர். தற்போது சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால் உடனடி தேவையாக அடிப்படை வசதிகளையும், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாமதமின்றி செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பை காடாக மாற போகிறது என்பது நிச்சயம்...