மழை நிவாரணம் வழங்காததை கண்டித்து சென்னை சாலையில் பொதுமக்கள் மறியல்
விழுப்புரம், : விழுப்புரத்தில் மழை நிவாரணம் வழங்காததால், சென்னை சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் கனமழை பாதித்த பகுதிகளில், அரசு சார்பில் மழை நிவாரண தொகை 2,000 ரூபாய் மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் நிவாரணத்திற்கான டோக்கன் வழங்காததால் நிவாரண பொருள்களும் வழங்கவில்லை.நேற்று காலை விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடையில், பொது மக்கள் நிவாரணம் பெற திரண்டிருந்தனர்.நீண்டநேரம் காத்திருந்த செல்லியம்மன்கோவில் தெரு, பாப்பான்குளம், கமலாநகர், வடக்கு தெரு பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை நெடுஞ்சாலையில் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் வாயில் பகுதியில் மதியம் 12:00 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சென்ற விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறி சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து 12:20 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.