அவலுார்பேட்டை - விழுப்புரத்திற்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையிலிருந்து விழுப்புரத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி பகுதியாக, மேல்மலையனுார் தாலுகாவில் வளர்ந்து வரும் பகுதியாக அவலுார்பேட்டை கிராமம் உள்ளது. இங்கிருந்து சென்னை, திருவண்ணாமலை, செஞ்சி உள்ளிட்ட ஊர்களுக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப்பகுதியாக விளங்குவதால் கிராம மக்கள் பலரும் வெளியூர் செல்வதற்காக அவலுார்பேட்டைக்கு வருகின்றனர். 23 கி.மீ., துாரத்தில் திருவண்ணாமலையும், விழுப்புரம் 70 கி.மீ., துாரத்திலும் உள்ளது. அவலுார்பேட்டையிலிருந்து மேல்மலையனுார், திருவண்ணாமலை, கீழ் பென்னாத்துார் உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்று விழுப்புரத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பஸ்சுக்காக காத்திருப்பதில் பல மணி நேரம் விரயமாகிறது. அரசு அலுவல் காரணமாக விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலகங்களுக்கு செல்வதற்கு அவலுார்பேட்டையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்படுகின்றனர். அவலுார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் நலன் கருதி அவலுார்பேட்டையிலிருந்து விழுப்புரத்திற்கு நேரடி அரசு பஸ் இயக்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.