ஏ.டி.எம்., மையத்தில் ரூ.50,000 அபேஸ்
விழுப்புரம்: ஏ.டி.எம்., மையத்தில், ஏமாற்றி பணத்தை 'அபேஸ்' செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம், திருச்சி சாலையை சேர்ந்தவர் பரசுராமன், 49; ஓட்டல் மேலாளர். இவர், அதே ஓட்டலில் பணிபுரியும் குப்புசாமி,35; என்பவரிடம், கடந்த 29ம் தேதி காலை தனது ஏ.டி.எம்., கார்டினை கொடுத்து, அவரது வங்கி கணக்கில் இருந்து, 5000 ரூபாய் பணம் எடுத்து வரும்படி கூறினார். அவரும் விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பில் உள்ள ஒரு ஏ.டி.எம்.,மிற்கு சென்று பணம் எடுத்தார். ஆனால் அங்கு பணம் வராததால், அருகிலிருந்த நபர் அவருக்கு உதவுவது போல் நடித்து, அவரது ஏ.டி.எம்., கார்டை மாற்றிகொடுத்துவிட்டு, குப்புசாமியை ஏமாற்றி அனுப்பினார். சிறிது நேரத்தில், வேறு மையத்தில் மர்ம நபர், பரசுராமனின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ.50,000 பணத்தை எடுத்து மாயமானார். இது குறித்து பரசுராமன் புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.