சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
விழுப்புரம்: மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் வெளிநாட்டில் பயில அரசின் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு : தமிழக அரசு இந்தாண்டு முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளில் வெளிநாடுகளில் சென்று படிப்போரில், 10 பேருக்கு ஒரு மாணவருக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவிதொகை வழங்க ரூ.3.60 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இந்த கல்வியாண்டில், முதுகலை பட்டப்படிப்பு பயில உலகளாவிய குவாக்கரெல்லி சைமண்டஸ் தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களிடம் இருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.8 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். பட்ட படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் இருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் ஆகிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்து முதுகலை பட்டப்படிப்பிற்கான சேர்க்கை பெற்றிருப்பவராக இருத்தல் வேண்டும். இந்த திட்டத்தில் www.bcmbcmw.tn.gov.in/welfschemes-_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மகால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை வரும் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.