| ADDED : பிப் 01, 2024 04:47 AM
விழுப்புரம்: டோல்கேட் ஊழியரை தாக்கிய வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த புளிச்சப்பள்ளம் காலனியை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் மணிமாறன்,32; இவர், கடந்த 2019ம் ஆண்டு பிப்., 6ம் தேதி மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, டாடா சுமோ காரை ஓட்டி வந்த புதுச்சேரி, சேதராப்பட்டு பெரியண்ணா மகன் சுகுமாரிடம், மணிமாறன் கட்டணம் கேட்டதற்கு தர மறுக்க இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த சுகுமார், தனது நண்பர்கள் விக்னேஷ்,27; கமல்ராஜ்,28; அசோக்,34; காமேஷ்,23; ஆகியோரை அழைத்து வந்து, மணிமாறனை, ஜாதி பெயரை கூறி திட்டி தாக்கினார்.இதுகுறித்த புகாரின் பேரில் சுகுமார்,35; உள்ளிட்ட 5 பேரை கைது செய்த ஆரோவில் போலீசார், அவர்கள் மீது விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கோதண்டபாணி ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகுமாருக்கு ஓராண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், மற்றவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.