| ADDED : நவ 18, 2025 07:36 AM
மயிலம்: மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 230 ரூபாய் சிக்கியது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் நிர்ணயித்து இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் நேற்று மாலை 5:50 மணியளவில் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இரவு 7:35 மணி வரை நடந்த சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 230 ரூபாய் பணம் மற்றும் சில ஆவணங்கள் சிக்கியது. இதுகுறித்து சார்பதிவாளர் (பொறுப்பு) நதியாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில் 'பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.